Wednesday, November 5, 2014

என்னைப் பற்றி நான்….

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நானும் என் சகோதரர்களும் ஒழுக்கத்திலும் பக்தி வழிகளிலும் தேவனை அறிந்துகொள்ளும் அறிவிலும் கிறிஸ்தவ வழிமுறைகளைப் பின்பற்றுவதில் போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டோம்.
நான் எனது மாணவ பருவத்திலேயே தேவனை அறிந்துகொள்ள அதிகமாக ஆர்வம் காட்டினேன். அந்த சிலாக்கியத்தை நான் என் பெற்றோரின் மூலமாக பெற்றுக்கொண்டேன்.
நான் தேவனை தேடியமைக்கு முக்கியமான காரணமாக இருந்தது என்து பெற்றோரின் வளர்ப்புமுறைதான். அவ்வாறு நான் பிறந்தபோது, அநேகர் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இறந்ததையும் அந்த நாட்களின்பின் அகதிமுகாமொன்றில் வாழ்ந்த காலத்திலும், இன்னொருதடவை என் தலைக்கு மேலாக ஹெலிகொப்டர் கீழே மக்களை நோக்கி வெடிகளைச் சுட்டபடி பறந்து சென்றபோதும், ஐந்தடி தூரத்தில் செல்குண்டுகள் வெடித்து சிதறியபோதும், என்னுடன் பாடசாலையில் ஒன்றாக கற்ற நண்பர்களில் சிலர் தவறான வழிநடத்தலின் கீழ், துப்பாக்கியை தூக்கவும் பழிவாங்கவும் சண்டையிடவும் தங்களை ஒப்புக்கொடுத்தபோதும் அதிசயமாய் ஆண்டவர் என் சிறுபிராயம்முதல் பாடசாலை நாட்களிலும் என்னைப் பாதுகாத்தார். அவர் ஒருவரே என்னையும் வழிநடத்தினார்.
நான் 10 வது வயதில் முழு வேதாகமத்தையும் வாசித்து முடித்தேன். 1996ம் ஆண்டு எனது 14 வது வயதில் தண்ணீர் ஞானஸ்நானத்தை பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருடைய நாமத்தில் பெற்றுக்கொண்டேன். அவ்வருடமே தூயஆவியானவர் தரும் அபிஷேகத்தையும் பெற்றேன். அப்போது நான் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதன்பிறகு நான் எனது கல்வியைத் தொடர்ந்தேன்.
அந்தவகையில், தேவன் என்னுடன் இடைபட்டு என் பாவங்களை மன்னித்தார் என்ற நிச்சயம் இருந்தபடியினாலும் சிறுவயதிலிருந்து பலவகைகளில் என்னைப் பாதுகாத்து வந்த தேவன் தொடர்ந்து என்னை கைவிடாமல் வழிநடத்தி வருகின்றபடியினாலும்அவருக்கு நன்றியைத் செலுத்துவதோடு என்னை இரட்சித்து, வழிநடத்தி, இம்மட்டும் வாழ வைத்த என் தேவனுடைய சித்தத்தின்படி இனியும் வாழ என்னை அர்ப்பணித்து என் மிகுதி வருடங்களையும் என் ஆண்டவருக்குச் சமர்ப்பிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.